நீங்கள் தான் என் சொத்து.. தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி உருக்கமான கடிதம்!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 102 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். இதில் கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எழுதிய கடித்ததில், ”நீங்கள் தான் என் சொத்து. மதிப்புமிக்க பதவியை உதறிவிட்டு மக்களுக்காக சேவையாற்ற வந்ததில் மகிழ்ச்சி. கட்டாயம் கோவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்’’ என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாளை (ஏப்ரல் 19) தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில், முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.

அந்த வகையில் கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலைக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மோடி, ‘‘என் அருமையான காரியகர்த்தாவே. ராம நவமி தினத்தில் இந்தக் கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மதிப்புமிக்க பணியை (ஐ.பி.எஸ்) விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவையாற்ற உறுதி எடுத்துள்ள உங்கள் முடிவுக்கு நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு முழவதும் பா.ஜ.க அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தி, இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்டவற்றின் மூலம் நீங்கள் முக்கிய பங்காக உள்ளீர்கள். உங்களின் அர்ப்பணிப்பால் கோவை நிச்சயம் லாபம் பெறும்.

கோவை மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை போன்றவர்கள் தான் எனக்கான பெரும் சொத்து. ஒரு குழுவாக, தொகுதியாக நாட்டு மக்களின் நலனுக்காக நாம் எதையும் விட்டு கொடுக்க மாட்டோம்.

இது சாதாரண தேர்தல் அல்ல. இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக முதியவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அனுபவித்த சிரமங்களை நினைவில் வைத்துக் கொள்வார்கள். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக அனைவரும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நமது பணி என்பது இந்த தேர்தல் மூலம் தொடரும்.

இந்த தேர்தல் என்பது நம்மை பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்கும் பாலமாகும். பா.ஜ.க பெறும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையான அரசை அமைப்பதை நோக்கி செல்லும். அதுமட்டுமின்றி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும்.

கடைசி நேரத்தில், நீங்களும் மற்ற நிர்வாகிகளும் தேர்தல் வேலைகளில் பிசியாக இருப்பீர்கள், இருப்பினும் உங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் நாட்டிற்கு இது முக்கியமான தேர்தல், எனவே வெயில் தொடங்குவதற்கு முன்பே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள்,” இவ்வாறு நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top