மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இலவசங்களை கொடுத்து, அடிமையாக்கும் அரசியல் இயக்கம் வேண்டுமா, வளர்ச்சிக்காக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி இயக்கம் வேண்டுமா என, மக்களே முடிவு செய்ய வேண்டும் என மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்தார்.
மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம், கீழ்ப்பாக்கம் கல்லறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 15) தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதன் பின், அவர் கூறியதாவது:
பாமரர்களுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, மருத்துவம், விளையாட்டு வசதி செய்து கொடுப்போம் என்ற எண்ணம் கிடையாது. மக்கள் தினக்கூலியாக இருந்தால் தான், அவர்களுக்கு அரிசி, பருப்பு கொடுத்து வாக்கு பெற முடியும் என்று நினைக்கின்றனர்.
மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இலவசங்களை கொடுத்து, அடிமையாக்கும் அரசியல் இயக்கம் வேண்டுமா, வளர்ச்சிக்காக செயல்படும் பா.ஜ.க., இயக்கம் வேண்டுமா என, மக்களே முடிவு செய்ய வேண்டும்.
இதற்கு பா.ஜ.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையே ஆதாரம். அதில் அடுத்த 25 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ச்சி பெற வேண்டும் என, தெளிவாக திட்டமிடபட்டுள்ளது.
அதேபோல் ஊடகத்துறை, போலீஸ் உட்பட ஒவ்வொரு துறைக்கும் தேவையான வளர்ச்சி குறித்தும் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் முதல், தமிழுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், அனைவருக்குமான வளர்ச்சி என, அனைத்தும் மக்களின் தேவையை அறிந்து வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள குடிசை பகுதியை பார்த்தபோது, 40 ஆண்டுகளாக இதே நிலைமைதான் தொடர்கிறது. ஆனால் மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் எம்.பி., — எம்.எல்.ஏ.,க்கள், 100 கோடிக்கு மேல் சொத்துக்களை குவித்துள்ளனர்.
தேர்தலுக்கு தேர்தல் வாக்குக்கு காசு கொடுக்கின்றனர். காசை வாங்கும் நிலைமையில் மக்களை வைத்துள்ளனர்.
ஒவ்வொரு தொகுதி முழுதும், விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம். மக்கள், பா.ஜ.க.,விற்கு நிச்சயம் வாக்களிக்க வேண்டும். மக்களின் வாழ்க்கை அவர்களின் கையில் உள்ளது. அவற்றை பா.ஜ.க.,வால் மட்டுமே மாற்ற முடியும்.
தி.மு.க.,வின் கரை வேட்டியை கட்டாத ஒருத்தர், மத்திய சென்னையில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
அப்படிப்பட்ட வேட்பாளரை தான், தி.மு.க.,வும் தூக்கி சுமக்கிறது. தமிழகத்தில் உள்ள எம்.பி.,களில் மத்திய அரசின் நிதியை பயன்படுத்தாதவர் தயாநிதி. இதை நான் சொல்லவில்லை; ஆங்கில நாளிதழ் ஒன்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.