‘அக்கா 1825’ தேர்தல் அறிக்கை வெளியிட்ட தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்!

தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், ‘அக்கா 1825’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) நிர்வாகிகளுடன் கூட்டாக வெளியிட்டார். இதில் மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன், கராத்தே தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாள்தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு 365 நாள்கள் என்று கணக்கிட்டு 1825 நாள்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தேர்தல் அறிக்கையை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கு கோதாவரி ஆற்றுநீரை கொண்டுவர நடவடிக்கை

பெரும்பாக்கம், சித்தாலபாக்கம் உள்ளிட்ட இடங்கள் உள்பட மொத்தம் 25 நீர்நிலைகள் தூர்வாரப்படும்.

மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வடபழனி, திருவான்மியூர், தி.நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.

சைதாப்பேட்டை, மாம்பலம் ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும்.

நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும்.

ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்வதற்கான பிரதமரின் காப்பீட்டு திட்டம் தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆண் பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். தென் சென்னை முழுவதும் 18 பொது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.

பொது கழிப்பிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

நடமாடும் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படும்.

போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையம் ஒன்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top