தென்மாவட்ட பாஜக சகோதரர்களே பொதுமக்களுக்கு உதவுங்கள்: மாநில தலைவர் அண்ணாமலை!

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழக பாஜக சகோதரர்கள் உதவும்படி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் (டிசம்பர் 17) வெளியிட்டுள்ள தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில்;

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில், சுமார் 200 மி.மீ. மழை இது வரை பொழிந்துள்ளது என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடுமையான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கி, தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி, மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தென்மாவட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன், கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட பாஜக சகோதரர்கள், மழை நின்ற பிறகு, பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top