வரலாற்றுச் சாதனை.. அரபு நாட்டில் இந்து கோவிலை திறந்த பிரதமர் மோடி!

அரபு நாடு என்று சொல்லக்கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி (14.02.2024) நேற்று திறந்து வைத்தார். ஆன்மிகத் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ், மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோவிலின் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஹ்லான் மோடி நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் (பிப்ரவரி 13) பிரதமர் மோடி பேசினார். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது என்றார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து துபாய்- அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில், பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 27 ஏக்கர் பரப்பளலான பிரம்மாண்ட சுவாமி நாராயண் கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அபு முரைக்கா பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் இந்தியாவில் செதுக்கப்பட்டு, பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கிய 13.5 ஏக்கரில் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்ற போது இந்த நிலத்தை தானமாக வழங்கினார் இளவரசன்.

கோவிலின் ஏழு கோபுரங்கள் ஒவ்வொன்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எமிரேட்டைக் குறிக்கிறது. 32.92 மீட்டர் (108 அடி) உயரம், 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்து வேதங்களான ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்த கோவிலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 2019 ஜனவரியில் மேலும் 13.5 ஏக்கரை ஒதுக்கியது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோவிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோவிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top