இங்கிலாந்து கடற்படை கைது செய்த 32 மீனவர்கள் விடுதலை: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

ஆழ்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 32 இந்திய மீனவர்களை கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து கடற்படை கைது செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 15-ம் தேதி சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சைமன் பாஸ்டின் என்பவரது இரு விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையைச் சேர்ந்த 28 பேர், நாகை மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த தலா இருவர் என மொத்தம் 32 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கடந்த 27-ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாகக் கூறி, இங்கிலாந்து நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான டீகோ கார்சியா தீவுக்கு கொண்டு சென்று, அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கக் கோரி அவர்கள் குடும்பத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மீனவர்கள் மீட்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 கன்னியாகுமரி மாவட்ட தமிழ் மீனவர்களை மீட்டுக் கொடுத்த, பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இங்கிலாந்து நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 கன்னியாகுமரி மாவட்ட தமிழ் மீனவர்களை, தமது அயராத முயற்சியால் விடுவித்து மீட்டுக் கொண்டு வந்த, நமது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக சார்பிலும் மற்றும் தமிழக மீனவர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீனவர்கள் மீட்கப்பட்ட தகவலை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top