தமிழகத்தில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை வசதியே இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுமைக்குமான மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் இல்லை என்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும், 22 அரசு மற்றும் 50 அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் தனியாரால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் கூட இல்லை என்பதை தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

மேலும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில்,  காலியாக இருக்கும் 38% அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப, கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதையும், தமிழகம் முழுமைக்குமான மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநிலக் கொள்கை இல்லாததையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கைகள் உருவாக்குவது குறித்து, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட மாநில ஆலோசனைக் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியிருப்பதாக, தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், போலி சமூக நீதி நாடகமாடி மக்களை ஏமாற்றிக் கொண்டிருகிறது திமுக. உடனடியாக, காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்காக, குறைந்தது ஒரு சிறப்புப் பள்ளி வீதம் திறக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top