நியாயமான முறையில் போராடிய செவிலியர்களை கைது செய்வதா ? திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

நியாயமான முறையில் தங்களின் பணியை நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் போராடிய செவிலியர்களை கைது செய்வதா, என மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  கூறியிருப்பதாவது: பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் துரோகம் செய்திருக்கிறது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை, காவல்துறையை ஏவி, சமூக விரோதிகளைப் போல அடாவடியாகக் கைது செய்திருக்கிறது திமுக அரசு.  

ஏற்கனவே, வாக்குறுதி எண் 181ல், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஏமாற்றி, அவர்களையும் கைது செய்திருந்தது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர, இவர்கள் செய்த தவறென்ன?

உடனடியாக, கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த உடனே கொரோனா பேரிடர் காலத்தில் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் அனைவருக்கும் கட்டாயம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது இரண்டரை ஆண்டுகள் ஆன பின்பும் ஸ்டாலின் அந்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாகவே நேற்று (அக்டோபர் 10) சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை பெண் என்றும் பாராமல் போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top