சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர் வெற்றி: மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களையும், தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் தலைவர் அண்ணாமலை  கூறியிருப்பதாவது: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு. தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இது உலக அரங்கில், தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்துள்ள மற்றொரு பெருமையான நிகழ்வாகும்.

கடந்த 2001 ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துப் பெருமை சேர்த்தவர். திரு. தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் தலைமையிலான அரசு, தொடர்ந்து, உலக அரங்கில் சிங்கப்பூரின் பெருமையை நிலைநிறுத்துவதாகவும், இந்தியாவுக்கும், தமிழ் மக்களுக்கும், சிங்கப்பூருக்குமான நெருக்கமான உறவை மேன்மைப்படுத்துவதாகவும் அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட எஸ்.ஆர். நாதன் என்ற செல்லப்பன் ராமநாதன், 2009ம் ஆண்டு சிங்கப்பூர் அதிபராக தேர்வாகி, அதிபராக ஆட்சி செலுத்தினார்.  அவருக்கு பின் இரண்டாவதாக தற்போது தர்மன் சண்முகரத்னம் அதிபராக தேர்வாகியுள்ளார். இது சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top