பழவேற்காடு பகுதி மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான முகத்துவாரப் பணிகள் குறித்து பார்வையிடுவதற்காக சென்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் தேசிய சிறுபான்மை அணியின் செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக பாஜக, ஆகஸ்ட் 14-ம் தேதியை தேசப் பிரிவினை நினைவு நாளாக அனுசரிக்கிறது. இதையொட்டி காஞ்சி மாவட்ட பாஜக சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து இருந்த நிலையில், அனுமதி பற்றிக் கவலைப் படாமல் மாவட்டச் செயலர் கே.எஸ்.பாபு தலைமையில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்ல பாஜகவினர் முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் பழவேற்காடு முகத்துவாரத்துக்கு தேசிய கொடியுடன் படகுகளில் செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் போலீசாரின் அத்துமீறலை கண்டித்து பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.