மணல் கொள்ளை வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று (ஏப்ரல் 25) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் 5 பேரும் நேரில் ஆஜராகினர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத் துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்மனுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், 5 மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 25) காலை நேரில் ஆஜராகினர். வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இன்னும் பலர் இந்த மணல் விவகாரத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top