மக்களவைத் தேர்தலை கண்டு களிக்க 25 நாட்டு பிரதிநிதிகளை அழைத்த பா.ஜ.க.!

மக்களவைத் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவை நேரில் காண்பதற்கு, 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினருக்கு பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ராகுல், வெளிநாடு செல்லும் போதெல்லாம் நம் நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்து விட்டதாக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தேர்தலை மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாக நடத்திக் காட்டும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 19ல் துவங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 4ல் முடிவுகள் வெளியாகின்றன. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான, இறுதிச் பிரசாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் நிர்வாக நடைமுறைகளை நேரில் காண, 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுவரை, 15 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். மீதம் உள்ள 10 நாடுகள் இன்னும் சில தினங்களில் பங்கேற்பை உறுதி செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பா.ஜ.க., தேசிய செய்தி தொடர்பாளர் பிரத்யுஷ் காந்த் கூறியதாவது:

காங்கிரஸ் எம்.பி., ராகுல், வெளிநாடு செல்லும் போது இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைந்துள்ளது என, புலம்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

எனவே, பா.ஜ.க.,வின் தேர்தல் பிரசாரம் மற்றும் நம் நாட்டின் தேர்தல் நடைமுறை எவ்வளவு வெளிப்படைத் தன்மையுடன் நடக்கிறது என்பதை, உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் நேரில் கண்டு உணர வேண்டும் என முடிவு செய்தோம்.

அதற்காக, 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரில் வந்து களத்தில், ‘மோடி மேஜிக்’கை காணும் போது, ராகுல் சொன்னது உண்மையா, பொய்யா என்பதை உணர்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top