அயோத்தி ராமர் கோவில்: முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ம் தேதி கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், நேற்று ( 23.01.2024 ) முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 22-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம், ராம் லல்லா சிலை பிராணப் பிரதிஷ்டை விழா மிகச் சிறப்பாக  நடைபெற்றது. 

இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோவில் கும்பாபிஷேகம் விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாடு முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று அதிகாலை (ஜனவரி 23) மூன்று மணி முதலே அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. உடனே பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்ய விரைந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. எனினும், தடுப்புகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் முண்டியடித்துச் சென்றனர். காலை 6 மணிக்குத் தொடங்கிய தரிசனம் இரவு 10 மணி வரை நீடித்தது.

அந்த வகையில், முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பேர் குழந்தை ராமரை தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பக்கதர்களும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பக்தர்கள் அமைதி காத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top