மத்திய அரசின் துரித நடவடிக்கையால் தூத்துக்குடிக்கு வழக்கம் போல் ரயில் சேவை!

தூத்துக்குடியில் மழை காரணமாக ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 14-ம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, 2 தினங்கள் கனமழை கொட்டித்தீர்த்தது.

4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதற்கிடையே மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து இடங்களிலும் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுள்ளது. அதன்படி நேற்று (டிசம்பர் 21) சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தூத்துக்குடி சென்றடைந்தது. எனவே இந்த ரயிலானது இனி வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்செந்தூர்-எழும்பூர் விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும். மேலும் திருச்செந்தூர்-பாலக்காடு செல்லும் ரயில் மதியம் 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின்போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் சிக்கியிருப்பதை அறிந்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அதற்காக தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து மீட்புப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தார். பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும், அவர்கள் மீண்டும் சென்னைக்கு செல்வதற்கான சிறப்பு ரயிலையும் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top