ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தூத்துக்குடி மக்கள் டெல்லியில் போராட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி அதன் அருகாமையில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து டெல்லியில் நேற்று (நவம்பர் 29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் ஆலை அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சில அமைப்புகள் திட்டமிட்டு தூண்டி போராட்டங்கள்  நடத்தின. கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதி விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கிராம மக்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அறவழியில் நேற்று (நவம்பர் 29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி வணிகர் பேரமைப்பு நிர்வாகி பி.கே.ஜெயபாலன் கூறியதாவது:

ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் எங்கள் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. எங்கள் பகுதியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வழிவகுக்க மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவே இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top