திமுக பேச்சாளர் பேசிய வீடியோவை குடும்பத்துடன் பார்த்து விட்டு ஜாமீன் பற்றி பேசுங்கள்: நீதிபதி

கவர்னரையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவையும் அவதுாறாக பேசிய வழக்கில் கைதான தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக கவர்னர் ரவி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, அவதுாறாகவும், அநாகரிமாகவும் பேசியதாக, தி.மு.க. பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கொடுங்கையூர் போலீசாரால் கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டார்.  புழல் சிறையில் உள்ள அவரின் ஜாமின் மனுவை, எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு:

பொதுக் கூட்டங்களில், அரசியல் பிரச்னைகள் குறித்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். மக்கள் கவனத்தை ஈர்க்க நகைச்சுவையாக பேசுவேன்.

இது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. எனக்கு எதிராக அரசியல்வாதிகள் யாரும் புகார் தரவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன், ஜூன் 28 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு திமுக வழக்கறிஞர் குள்ளன் சரவணன் ஆஜராகி, ‘மனுதாரருக்கு, 65 வயதாகிவிட்டது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்’ என, வாதிட்டார்.

அதற்கு, நீதிபதி அல்லி: ‘மனுதாரர் பேசிய வீடியோவை ஒருமுறை உங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்துவிட்டு ஜாமீன்  பற்றி பேசுங்கள்’ எனக்கூறி, விசாரணையை ஜூன் 30க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒவ்வொரு மாதமும் திமுக பேச்சாளர்கள் பெண்களை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாக பேசுவதை வாடிக்கையாக்கி உள்ளனர். நீதிமன்றம், வழக்கு என்றதும் வயதை காரணம் காட்டி, மன்னிப்பு கேட்பதை வழக்கமாக்கியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top