உலகின் மூத்த மொழி தமிழ்; தேர்வும் தெளிவும் நிகழ்ச்சியில் உரக்க முழங்கிய மோடி

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களின் தேர்வுக்கு முன் அவர்களோடு கலந்துரையாடி தேர்வு சமயத்தில் ஏற்படும் மன அழுத்தம், பயம், தோல்வி குறித்தவற்றை அவர்களிடமிருந்து நீக்கி தேர்வினை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின் மிகப் பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவ, மாணவியரின் கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதில்கள் இதோ தமிழில்…..

தேர்வு குறித்த கலந்துரையாடலின் 6-வது அத்தியாயத்தை பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இன்று ( 27.01.23) புதுதில்லி தல்கத்தோரா விளையாட்டு மைதானத்தில் கலந்துரையாடினார். கலந்துரையாடலுக்கு முன்பு மாணவர்கள் காட்சிப்படுத்தி வைத்திருந்த பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டார். பிரதமரின் சிந்தனையில் உருவான தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருடன் வாழ்க்கை மற்றும் தேர்வுகள் குறித்த பல்வேறு பொருள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர். இந்த ஆண்டு, 155 நாடுகளிலிருந்து சுமார் 38.80 லட்சம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான கேள்விகள் பதிவேற்றப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இளைய தலைமுறையினரின் எண்ணங்களை காணும் வாய்ப்பு இதன் மூலம் தமக்கு கிட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். “இந்தக் கேள்விகள் எனக்கு பொக்கிஷம் போன்றவை” என்று பிரதமர் கூறினார். இந்த அனைத்துக் கேள்விகளையும் தொகுக்க வேண்டுமென தாம் விரும்புவதாகக் கூறிய அவர், வரும் ஆண்டுகளில் சமூக விஞ்ஞானிகள் இவற்றை பகுப்பாய்வு செய்யும் போது இளம் மாணவர்களின் எண்ணங்களின் எத்தகைய சிந்தனைகள் உதயமாகி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

அஸ்வினி, மதுரை

தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா மாணவி அஸ்வினி, தில்லி பீதாம்புரா கேந்திரிய வித்யாலயாவைச் சேர்ந்த நவ்தேஜ், பாட்னாவின் நவீன் பாலிகா பள்ளியின் பிரியங்கா குமாரி, ஆகியோர் எழுப்பிய, குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஏற்படும் குடும்பத்தின் ஏமாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை தவறு என்று கூற முடியாது என்றார். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் சமூக அந்தஸ்து காரணமாக உள்ள எதிர்பார்ப்புகளாக இருந்தால் அவை கவலையளிக்கக் கூடியதுதான் என்றார்.

தேர்வுக்கு எப்படி தயாராவது என்பது பற்றி தெரியவில்லை. மனஅழுத்தம் நிறைந்த சூழ்நிலையால் மறதி ஏற்படுகிறது என்று டல்ஹவுசி கேந்திரிய வித்யாலயாவை சேர்ந்த 11-வது வகுப்பு மாணவர் ஆரூஷி தாக்கூரின் கேள்வி, நேர மேலாண்மை குறித்த ராய்ப்பூர் கிருஷ்ணா பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த அதிதி திவானின் கேள்வி ஆகியவற்றுக்கு பதிலளித்த பிரதமர், தேர்வுகள் உள்ளனவோ இல்லையோ பொதுவாழ்வில் நேர மேலாண்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். வீட்டில் தாய்மார்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நேரப்படி செய்வதை கவனிக்கும் மாணவர்கள், நேர மேலாண்மையை எளிதில் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களது அன்னையரை கவனித்து நுணுக்கமான நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

சத்தீஸ்கரின் பாஸ்டரில் உள்ள சுவாமி ஆத்மானந்த் அரசு பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவன் ரூபேஷ் காஷ்யப், தேர்வுகளில் நியாயமற்ற மற்றும் மோசடி செயல்களைத் தவிர்ப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதேப் போல் ஒடிசாவின் கோனார்க்பூரியைச் சேர்ந்த தன்மே பிஸ்வால், தேர்வுகளில் மோசடிகளை ஒழிப்பது குறித்தும் கேட்டார். இதற்கு பதிலளித்த பிரதமர், மோசடிகளைத் தடுப்பது குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நீதிக்கு புறம்பான செயல்களை செய்து தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பாளரை முட்டாளாக்கும் முறைகேடுகள் மிகவும் அபாயகரமானவை என்றார். ஒட்டுமொத்த சமூகமும் தாமாக முன்வந்து இத்தகைய மோசடிகளைத் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சில பள்ளிகளின் ஆசிரியர்கள் டியூசன் எடுப்பதன் மூலம் இத்தகைய முறைகேடுகளை கற்பித்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வழிகளை உருவாக்கி தருவதாக்கக் குற்றம் சாட்டினார். காலமாற்றத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை முழுவதுமே மாறும், நீங்கள் ஒவ்வொரு படியிலும் தேர்வுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், குறுக்கு வழியைத் தேர்வு செய்யும் மாணவர்கள், சில தேர்வுகளில் மட்டுமே தேர்ச்சியடைய முடியுமே தவிர, வாழ்க்கையில் கட்டாயம் தோல்வியையேத் தழுவுவார்கள் என்று தெரிவித்தார்.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த மாணவன், கடினமாக உழைப்பதற்கும், புத்தி கூர்மையுடன் உழைப்பதற்கும் இடையேயான வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு புத்தி கூர்மையுடனான உழைப்பு குறித்து தெரிவித்த பிரதமர், தாகம் உள்ள காகம் கற்களை நிரப்பி தண்ணீரைப் பருகுவதை உதாரணமாகக் காட்டினார். நாம் செய்ய வேண்டிய பணியின் பின்புலம் குறித்து ஆய்வு செய்வதுடன், சரியாக புரிந்துகொண்டு பணியாற்றுவதே சிறந்தது என்றும் புத்தி கூர்மையுடன் கடினமாக உழைப்பதே தற்போதைய தேவை என்று பிரதமர் கூறினார். எந்த பணியை செய்வதாக இருந்தாலும் முதலில் அதனை முழுவதும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

குருகிராமின் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர் ஜோவிட்ரா பட்ரா, சராசரியான மாணவன் தேர்வுகளை நன்றாக எழுத முடியுமா என கேள்வி எழுப்பினார். ஒவ்வொருவரும் தன்னுடைய திறனை பரிசோதித்து கொள்வது அவசியமான ஒன்று என்று பதிலளித்த பிரதமர், சரியான இலக்கையும், அதற்கான திறனையும் மாணவர்கள் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஒருவருடைய திறமைகளை தெரிந்து கொள்வதன் மூலம் அதற்கேற்ற முறையில் அவர்களை தயார்படுத்த முடியும் என்றார். நம்மில் பெரும்பாலானோர் சராசரி மற்றும் சாதாரணமானவர்களாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் அடைய முடியாத இலக்கைக் கூட எட்டி சாதனைப்படைக்க இயலும் என்றும் கூறினார். இந்தியாவின் பிரதமராக ஒரு பொருளாதார நிபுணர் பதவி வகித்த காலத்தில், அடைய முடியாத வெற்றியை தற்போது இந்தியா அடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். நாம் சராசரியானவர்கள் என்ற எண்ணத்தை ஒருவரிடம் திணிக்கக்கூடாது, அந்த சராசரியானவர்களால்தான் சாதனைப்படைக்க இயலும் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களது திறமைகளை அங்கீகரித்து ஊக்குவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விமர்சனங்களை கையாளுதல்

சண்டிகரின் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனாட் பஜ்வா, அகமதாபாத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் கும்கும் பிரதாபாய் சோலங்கி, பெங்களூரு ஒயிட்பீல்டு சர்வதேச பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் தரீரா ஆகியோர் மக்களின் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்றும், அவை உங்களுக்குள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பினர். இதே போல் தெற்கு சிக்கிமின் டிஏவி பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர் அஷ்டாமி சென் ஊடகங்களின் விமர்சனங்களை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், விமர்சனம் என்பது, நம்மை தூய்மைப்படுத்தும் திட்டம் என்றும், வளமான ஜனநாயகத்தின் அடித்தள வேராக அதுவே இருக்கிறது என்பதில் தமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்றார். விமர்சனம் என்பது ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர் தன்னுடைய நிகழ்ச்சி குறித்த பார்வையாளர்களின் மேலான கருத்துக்களை தெரிந்து கொள்ள முயற்சி மேற்கொள்வது, ஒரு வியாபாரி தன்னுடைய பொருள் குறித்த நுகர்வோரின் கருத்துக்களை அறிந்து கொள்ள முயல்வது போன்றவற்றுக்கு ஒப்பானது என பிரதமர் உதாரணங்களை பட்டியலிட்டார். உங்களுடைய செயல்களை விமர்சிப்போர் மிகவும் முக்கியமானவர்கள் என்றார். ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு ஆதரவு அளிக்கும் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்கு மாறாக அவர்களை வேறு வழியில் திசை திருப்புவதை தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் வழக்கமாக கொண்டிருப்பதாகக் கவலை தெரிவித்த பிரதமர், இந்த வழக்கத்தை கைவிடாவிட்டால் மாணவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக அமையாது என்றும் கூறினார்.

தெலங்கானாவின் ஜவஹர் நவோதய வித்யாலயா ரங்கரெட்டி பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஆர் அக்ஷராஸ்ரீ, கோபாலின் ராஜ்கியா மத்யமிக் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியான ரித்திகா போன்ற மாணவிகள் அதிக மொழிகளைக் கற்பதன் மூலம் எவ்விதம் நன்மைகள் பெற முடியும் என்று பிரதமரிடம் கேட்டனர். அதற்கு பிரதமர், நம்நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சார பன்முகத்தன்மை பற்றியும் உயர்வாக சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகளையும், ஆயிரக்கணக்கான வட்டார பேச்சு வழக்குகளையும் பயன்படுத்தும் மக்களை உள்ளடக்கிய நாடாக இந்தியா இருப்பது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார். புதிய மொழிகளைக் கற்பது, புதிய இசைக் கருவியை கற்பதற்கு சமமானதாகும் என்றார். ஒரு பிராந்திய மொழியை கற்பதன் மூலம் அந்த பிராந்தியத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை கற்கும் சிறப்பு கிடைக்கும் என்றார். மேலும் ஒருவர் புதிய மொழியை கற்பது அவருடைய அன்றாட வாழ்வியல் முறையில் கூடுதல் சுமையை ஏற்படுத்தி விடக்கூடாது என்றார். சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக அமையப் பெற்றிருக்கும் நமது நாட்டின் சிறந்த பாரம்பரியத்தை அனைத்து மக்களும் பெருமைக்கொள்ளும் விதமாக இருக்கிறது என்று கூறிய பிரதமர், பூமியில் பழமையான மொழியான தமிழ் மொழி குறித்தும் நமது நாடு பெருமைக் கொள்கிறது என்றார். பிரதமர் தனது ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரை குறித்து நினைவுகூர்ந்த அவர், தமிழ் மொழி குறித்த பல்வேறு உண்மைகள் பற்றி பேசி, இந்த பழமையான மொழியை நமது நாடு கொண்டிருப்பதற்கு பெருமை அடைவதாகவும் கூறினார். வடஇந்தியர்கள், தென்னிந்திய உணவு வகைகள் பற்றியும், தென்னிந்தியர்கள், வடஇந்திய உணவு வகைகள் பற்றியும் உயர்வாக தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள ஆசிரியை சுனன்யா திரிபாதி, எவ்விதம் மாணவர்களுக்கு உத்வேகத்தைக் கொண்டு, வகுப்புகளில் கீழ்படிதலுடன் கூடிய ஆர்வமிகுதியை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டார். அதற்கு பிரதமர், ஆசிரியர்கள் எப்போதுமே தலைப்புகள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து கடுமை காட்டாமல் இயல்புடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், மாணவர்களோடு நல்ல உறவு முறையை கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். மாணவர்கள் மத்தியில் ஆர்வமிகுதியை அதிகரிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். அப்படி செயலாற்றியதன் விளைவாகவே இன்றைய அளவிலும் மாணவர்கள், முந்தைய காலக் கட்டத்தில் அவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களின் மதிப்பு பற்றி குறிப்பிடுகின்றனர்.

சமூக கட்டமைப்பில் மாணவர்களின் நடத்தை குறித்து புதுதில்லியைச் சேர்ந்த பெற்றோரான திருமதி சுமன் மிஸ்ரா பிரதமரிடம் கேட்டார். அதற்கு பிரதமர், சமூகத்தில் மாணவர்களின் செயல்பாடு மற்றும் நடத்தை போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். சமூக கட்டமைப்பில் மாணவர்களின் பயன்பாடு தொடர்பாக, ஒட்டுமொத்த அணுகுமுறை அவசியம் ஆகும் என்றார். மாணவர்களை குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். அவர்களுக்கு பரந்து விரிந்த எல்லையை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்கள் சுற்றுலா சென்று அவர்களுடைய அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். இதன்மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவ அறிவு கிடைக்கும் என்றார். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகு மாணவர்கள் தங்களது மாநிலங்களை விட்டு வெளியே சுற்றுலா செல்ல வேண்டும் என்றும், பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு புத்தம் புதிய அனுபவங்களை தரும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தனது உரையின் இறுதியில் பிரதமர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். தேர்வு நேரங்களில் தேவையில்லாத மன அழுத்த சூழ்நிலையை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள் நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்றார். இதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் கொண்டாடும் படியாக உருமாற்றம் அடைந்து அனைத்து மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது உறுதியாகும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top