திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவே மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது என்று மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான இடத்தினை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது : 525 தேர்தல் வாக்குறுதிகளில் 200 கூட நிறைவேற்றாதது திமுக அரசு. இப்படி ஏமாற்றும் திறன் திமுகவுக்கு மட்டும்தான் உண்டு. தமிழக பட்ஜெட்டில் திருப்பரங்குன்றத்திற்கு மதுரைக்கு என்றா நிதி ஒதுக்குகிறார்கள். பொதுவாகத்தானே ஒதுக்குகிறார்கள். அதுபோலத்தான் மத்திய பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கவில்லை என்று தற்போதுள்ள துணை முதல்வர் ஒரு செங்கலை காட்டினார். ஆனால் பல லட்சம் செங்கலுடன் இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை எழுந்து நிற்கிறது. அதை நினைவுபடுத்தவும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவும் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய அதே இடத்தில் பிரதமர் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் தனியாக நிற்க தயாராக உள்ளதா. எப்படியாவது விஜய்கூட சேர்ந்துவிடலாம் என்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதுமுடியாமல் திரும்பவும் திமுக கூட்டணியில் உள்ளனர். அவர்கள் கூட்டணிதான் பொருந்தா கூட்டணி.
அதிமுகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு என்ன தகுதி உள்ளது. ஒரு கவுன்சிலர்கூட ஆகவில்லை. தமிழை வைத்து பிச்சைகூட எடுக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதாக கமல் பேசியுள்ளார். ஈவெ ராமசாமி அன்று பேசியதைத்தானே அமைச்சர் பேசினார். அது நிதியமைச்சரின் கருத்தல்ல. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.





