ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யுஏஇ உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்று, அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் பலனாக, எரிசக்தி தேவையில் ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் உட்கட்டமைப்பு, நிதித்துறை ஆகியவற்றில் 48,000 கோடி ரூபாய் முதலீடு ஆகிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தற்போது யுஏஇ பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிரதமர் நரேந்தி மோடி நெதர்லாந்து சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு அந்நாட்டு முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கினேன். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்திய நிலையில் நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நான் பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன், மேலும் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரைச் சந்திப்பேன். பிரமாண்ட நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.




