எட்டு வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் ‘அஷ்டலட்சுமிகள்’. இது செழிப்பு, செல்வம் மற்றும் மங்கலத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிக்கிமில் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று (ஏப்ரல் 28) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவிலிருந்து ஒரு விரைவுச்சாலையை அமைப்பது மற்றும் காங்டாக்கில் ஒரு ரிங் சாலை உருவாக்குவது உள்ளிட்ட சிக்கிமின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கும் விரைந்து செயல்பட மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
எட்டு வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் ‘அஷ்டலட்சுமிகள்’. இது செழிப்பு, செல்வம் மற்றும் மங்கலத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாகும். சிக்கிமின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகச் சுற்றுலாத் துறை திகழ்கிறது. மாநிலத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும். அமைதி, ஆன்மிகம் மற்றும் நல்வாழ்வின் இருப்பிடமாக சிக்கிம் திகழ்கிறது.
சுற்றுலாப் பயணிகள் இந்த மாநிலத்திற்குப் பெருமளவில் வருகை தர வேண்டும். சிக்கிம் மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், குறிப்பாக கால்பந்து மற்றும் வில்வித்தை போன்ற துறைகளில் உள்ள திறமையாளர்கள் சாதனை படைக்கவும், அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை நீண்ட காலமாகப் புறக்கணித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி புறக்கணித்த சிக்கிம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, என்னால் இயன்ற அனைத்தையும் நான் செய்வேன். சிக்கிம் மாநிலத்திற்கு சுகாதார வசதிகள் செய்தி கொடுக்காமல் காங்கிரஸ் கட்சி முற்றிலும் புறக்கணித்துவிட்டது. தற்போதைய அரசு, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மக்களுக்குத் தரமான மற்றும் மலிவு விலையிலான மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கேங்டாக் பல்ஜோர் மைதானத்தில் நடந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.




