கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் தங்கள் கட்சிக்கு வாக்கு அளிக்கவில்லை எனக்கூறி அங்குள்ள பொது குடிநீர் தொட்டியை திமுகவினர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தங்கரை அருகே திதிர் குப்பம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட குடிநீர் தேவைக்காக, ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும், சாலையோரத்தில் உள்ள மற்றொரு உயர்த்தப்பட்ட குடிநீர் மினி டேங்க்கையும் நம்பியுள்ளனர்.
இந்தநிலையில், திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பெருமாள் உடன் 50க்கும் மேற்பட்டோர் திதிர் குப்பம் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை எனக்கூறி அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியை அடித்து நொறுக்கினர். இதனால் டேங்கில் இருந்த தண்ணீர் கீழே கொட்டியது.
மேலும் அங்கு வசித்த பொதுமக்களை ஆபாசமாக பேசினர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




