தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இந்த முறை சாதாரண எண்ணிக்கையாக பார்க்கப்படவில்லை. வரலாறு காணாத வாக்குப்பதிவு சதவீதம் தமிழக அரசியலில் மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த அளவிற்கு மக்கள் திரளாக வாக்களிப்பார்கள் என ஆளும் தரப்பு எதிர்பார்க்கவில்லை என்ற அரசியல் வட்டார தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பல தனியார் ஏஜென்சிகள், பூத் ஏஜென்ட்கள் கருத்துகள், வார்டு வாரியான நிலவரங்கள், மக்கள் மனநிலை ஆகியவற்றை வைத்து ரிப்போர்ட்கள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கைகளில் ஆளும் தரப்புக்கு சாதகமான சிக்னல்கள் குறைவாக இருந்ததாகவும், அதுவே தலைமை தரப்பில் அதிருப்தி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் பேசப்படுகிறது.
குறிப்பாக பெண்கள் வாக்குப்பதிவு இந்த முறை அதிகமாக இருந்தது முக்கிய விவாதமாக மாறியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் முழுமையாக அரசியல் பலன் தந்ததா, அந்த பயனாளிகள் எவ்வளவு பேர் உண்மையில் ஆதரவாக வாக்களித்தார்கள் என்ற கேள்வி திமுக வட்டாரத்திலேயே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு முதல் முறை வாக்களித்த புதிய வாக்காளர்கள் எந்த மனநிலையில் வாக்களித்தார்கள் என்ற கணிப்பும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இதோடு வாரிசு அரசியல் குறித்த எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம், ஆட்சிக்கு எதிரான மனநிலை, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் உள்ளக புகைச்சல், பல தொகுதிகளில் ஒருங்கிணைந்த தேர்தல் வேலைகள் இல்லாமை போன்ற காரணிகளும் தனியார் ரிப்போர்ட்களில் சுட்டிக்காட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாவட்டங்களில் சமூக வாக்கு கணக்கீடுகள் எதிர்பார்த்தபடி இல்லையெனவும், சில முக்கிய தொகுதிகளில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கலாம் எனவும் அந்த அறிக்கைகள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ரிப்போர்ட்கள் மூலமாக கிடைத்த தகவல்கள் முக்கிய தலைமைக்கு சென்றதாகவும், அது கடும் அப்செட்டை உருவாக்கியதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மொத்தத்தில் தேர்தல் முடிவுக்கு முன்பே திமுக முகாமில் அமைதியான பதற்றம் நிலவுகிறது என்ற பேச்சு அரசியல் அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்துக்கும் இறுதி பதில் மே 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள்தான் சொல்லப் போகிறது. மக்கள் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்பது தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
மோ. வினோத்ராஜா






