அசாம் முதல்வராக மீண்டும் ஹிமந்த பிஸ்வ சர்மா பொறுப்பேற்று கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் என்டிஏ மூத்த தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
கடந்த மாதம் 9-ஆம் தேதி, அசாம் சட்டசபை தேர்தல் ஒரே கட்ட மாக நடந்தது. அதில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 82 தொகுதிகளை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று முன்தினம் அசாம் தலைநகர் கவுகாத்தியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஹிமந்த பிஸ்வா சர்மா ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சாரியாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதத்தை அளித்தார்.
ஆளுநர் ஏற்றுக்கொண்டதால் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா குவாஹாட்டியின் கானாபாரா பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மைதானத்தில் (மே 12) நடைபெற்றது. பிரம்மாண்டமான விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிம்ந்த பிஸ்வ சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால், பவித்ரா மார்கரிட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-வர்கள் மற்றும் துணை முதல்-வர்கள், முக்கிய விருந்தினர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவில் அவரது குடும்பமான முதல்-வரின் தாயார் மிருணாலினி தேவி, மனைவி ரினிகி புயான் சர்மா, மகன் நந்தில் பிஸ்வா சர்மா, மகள் சுகன்யா சர்மா ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர். முதல்வராக பதவியேற்ற சர்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.




