பிரதமரின் உருவப்படத்தை எரித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், திமுகவின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவப் படத்தை எரித்தது. மூன்று நாட்கள் ஆகியும், திமுக அரசின் காவல்துறை, இந்த தேசவிரோதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.
இன்றைய தினம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரதப் பிரதமரின் உருவப் படத்தை எரித்தவர்களைக் கைது செய்யாமல், நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜகவினரைக் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள பாஜகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.