பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் விருப்பப்படி, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் கூட்டணி பேச்சு நடத்தினர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: பாமக உடன் நாங்கள் கூட்டணியை அமைத்து இருக்கிறோம். அதிமுக, பாமக கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள், தொண்டர்கள் விரும்பியவாறு கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்களது கூட்டணி வெற்றி கூட்டணி.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டத்தை கொடுக்கிற அரசு அமைய எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதற்கு எங்களது கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய 3 கட்சிகளும் இணைந்து இரவு, பகல் பார்க்காமல் தேனீக்கள், எறும்புகள் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எங்களது கூட்டணியில் தற்போது பாமக இணைந்து இருக்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கையை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்பு அறிவிப்போம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க இணைந்து இருக்கிறது, எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். வலுவான கூட்டணி.
எங்களது நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கிற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்த்து இருக்கிறோம்.
சமீபத்தில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட போது கிராமத்தில் மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்தோம். ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.




