ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளரை போலீசார் தாக்கிய சம்பவத்திற்கு முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை (பிப்ரவரி 09) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டத்தை நிலைநிறுத்துவதற்கே போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை மட்டுமே வைத்து, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ, அவர்களை துன்புறுத்தவோ, அவமதிக்கவோ அல்லது தாக்கவோ போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை.
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியில் மாநிலம் முழுதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும், மொழி ரீதியாகவும் அதிகளவில் துன்புறுத்தப்படுவதில் எந்த ஆச்சரியம் ஏதுமில்லை.
தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் குடியிருப்பு கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் வரையிலான நமது பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு தூணும் அவர்களின் உழைப்பைச் சார்ந்தே உள்ளன. எனவே, அவர்களுக்கான கண்ணியத்தை கொடுக்க மறுப்பது என்பது நமது வளர்ச்சியை நாமே சீர்குலைப்பதாகும்.
இதுபோன்ற சம்பவங்கள், அரசியல் லாபத்திற்காக திமுகவினரால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக விதைக்கப்பட்ட வெறுப்பின் தவிர்க்க முடியாத செயல்களின் வெளிப்பாடு தான். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.





