ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் (NASM-SR) சோதனை வெற்றி அடைந்தது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடல்சார் தாக்குதல் திறன்களை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டி.ஆர்.டி.ஓ) இந்திய கடற்படையும் இணைந்து, குறுகிய தூரம் செல்லக்கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தின. ஒடிசாவில் உள்ள வங்காள விரிகுடா கடற்கரைக்கு அப்பால், கடற்படையின் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் (NASM-SR) வெற்றிகரமான சோதனைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), கடற்படை, இந்திய விமானப்படையினரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
சோதனையின் போது, ஒரே ஹெலிகாப்டரிலிருந்து அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. வான்வழி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் முதல் ஏவுகணைத் தாக்குதல் இதுவாகும், என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்தது. ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவும் திறனை நிரூபித்ததோடு, இந்த ஏவுகணைகள் கடற்பரப்பில் துல்லியமாகத் தாக்கும் திறனையும் வெளிப்படுத்தின.
மிகக் குறுகிய நேர இடைவெளியில் 2 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. இந்தியாவின் முதல் வான்வழி கப்பல் எதிர்ப்பு சோதனை இதுவாகும். 55 கி.மீ தூரம் செல்லக்கூடிய இது, ஏவிய பின் இலக்கைத் தானாகத் தேடித் தாக்கும் திறன் கொண்டது. இந்த சோதனையை டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானிகள், கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.




