மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி. தயாநிதி மாறனை சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு தயாராக இருந்ததாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
திமுக எம்.பி.,க்கள் தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசமடைந்த தர்மேந்திர பிரதான் திமுக எம்.பி.,க்கள் நாகரீகமற்றவர்கள் என கூறினார். இவை மீண்டும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து திமுக எம்.பி. தயாநிதி மாறன், அமளியில் ஈடுபட்டார்.
இதனால் கோபமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, தயாநிதி மாறனை கடுமையாக எச்சரித்ததுடன், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் அவையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என கண்டிப்புடன் தெரிவித்தார்.