மேற்காசிய போர் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் நடக்கிறது. இந்த சூழலில், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய டெல்லியில் (ஏப்ரல் 01) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஜெ.பி.நட்டா உட்பட பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேற்காசிய போர் நிலவரம் குறித்து நடக்கும் இரண்டாவது கூட்டம் இது.
இதில், எரிசக்தி, விவசாயம், உரங்கள், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
சமையல் எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், போதிய மின்சாரம் கிடைக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
பிரதமர் மோடி பேசுகையில், மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் தட்டுப் பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உலகளாவிய இந்த இக்கட்டான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள துறைகள் மற்றும் மக்களின் பிரச்னைகளை களைய அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ‘‘போர் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்’’ என்றார்.








