இந்தியாவின் வல்லமை உலக நாடுகளுக்கு பயனளிப்பதாக இருக்கிறது. இதனால், இந்தியாவின் வெற்றி, உலகம் முழுதும் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைத்து நிற்க உதவுகிறது என, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
பாரத தேசத்தின் 77வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க மூன்று நாள் பயணமாக கடந்த ஜனவரி 24ம் தேதி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா இருவரும் டெல்லிக்கு வந்தனர்.
தலைநகர் டெல்லியின் கடமை பாதையில் (ஜனவரி 26) நடந்த 77வது குடியரசு தின விழாவில் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, நாட்டின் வலிமையை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கண்டுகளித்தனர்.
பொருளாதாரம், வளர்ச்சி, அரசியல் உள்ளிட்டவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, 1993ல் உருவாக்கப்பட்டது ஐரோப்பிய யூனியன். அதில் தற்போது 27 நாடுகள் இடம் பெற்று உள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்புகள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் தீவிரமாக உள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் உடனான உறவை வலுப்படுத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, ஐரோப்பிய யூனியனுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்கான பேச்சு டெல்லியில் இன்று நடக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தை, ‘ஒப்பந்தங்களின் தாய்’ என்று உர்சுலா குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில், தன் இந்திய பயணம் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (ஜனவரி 26) கூறியுள்ளதாவது:
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது, என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம். உலக நாடுகளில் கூடுதல் ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, பாதுகாப்பு நிலவுவதற்கு, இந்தியாவின் வல்லமை உதவி வருகிறது.
உலகில் உள்ள பல நாடுகள் இந்தியாவால் பலன் பெறுகின்றன. அதனால் இந்தியாவின் வெற்றி, உலக நாடுகளின் நிலையான வளர்ச்சி, பாதுகாப்புக்கு உதவும். இவ்வாறு உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.






