முன்னாள் ஜனாதிபதி, அமரர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவாகத் தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது என அந்த அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்றைய தினம், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் பத்தாம் ஆண்டு விழாவில், தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர், மதிப்பிற்குரிய கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நமது முன்னாள் ஜனாதிபதி, அமரர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவாகத் தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளில், திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்த 2025 ஆம் ஆண்டு நிறைவைடையும்போது, 25 லட்சம் மரங்கள் என்ற உயரிய இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்பான செயல்பாடுகளுக்காக, வெற்றி அறக்கட்டளை வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் தலைவர் சிவராம் அவர்கள், கொடையாளர்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டாலும், அருகிலுள்ள மாவட்டங்களை உள்ளடக்கி, சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு, வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு பரவியுள்ளது பாராட்டத்தக்கது. சூழலியல் மாற்றத்தைச் சரி செய்ய, மரங்களால் மட்டும்தான் முடியும். எனவே, இந்த மரம் நடும் பணி, இன்னும் பல மாவட்டங்கள், மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டும், இளைஞர்கள் அனைவரும் இதற்காக முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, நிறுவனங்களின் பங்கு மகத்தானது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என அனைத்திற்கும், நிறுவனங்களின் வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில், புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையிலும், அவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதியும், நமது நாட்டில்தான் அதிகம்.
தமிழகத்திலும், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளை மையமாகக் கொண்டு, புதிய நிறுவனங்கள் உருவாக வேண்டும். இதன் மூலம், நம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும். அதே நேரத்தில், சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, நம் அடுத்த தலைமுறைக்குச் சிறந்த, வாழத் தகுந்த சூழலை உருவாக்கிப் பேணுவதும் நமது முக்கியக் கடமையாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சூழலியல் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்க, இளைஞர்கள் அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.