அன்பு தாமரைச் சொந்தங்களின் நெஞ்சங்களுக்கு,
முதற்கண் அடியேனின் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
இயல்பான இதயபூர்வ வணக்கத்துடன், இந்த நன்றி கலந்த வணக்கம் ஏன்? என ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு வினா எழும், எழுவது இயற்கையே.
இதற்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி, என்னுடைய அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மகிழ்ச்சிகரமான திருப்பம் நிறைந்த திருநாள்!
நான், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக, ஒரு தலைமை தொண்டனாக, ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்.
கடந்த எட்டு ஆண்டுகளாக தாயகப் பணியில் ஈடுபட்டு வந்த எனக்கு, இந்த தலைமை பதவி வழங்கி, ஆசியையும், ஆதரவையும் கொடுத்த அருமைத் தலைவர்களான பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு. நட்டா ஜி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஜி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தூய தொண்டர்களுக்கும் மற்றும் கட்சியின் அனைத்து தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாபெரும் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்கும் இந்த நேரத்தில், எனக்கு முன் இந்த பொறுப்பில் இருந்து சாதனைகள் பல புரிந்த தலைவர்களை நினைவு கூர்வது என்பது என் கடமையாக கருதுகிறேன்.
அண்ணன் திரு. பொன்னார் அவர்கள், இந்த கட்சியின் மாநில தலைவராக இருந்தபோது ”தாமரைச்சங்கம்” என்ற மாநாடு நடத்தியதன் மூலம் கட்சியை ஒரு படி மேலே வளர்த்தெடுத்தார். ”பொற்றாமரை”யின் மூலம் அண்ணன் உயர்திரு. இல.கணேசன் அவர்கள் தனது வளர்ச்சிப் பங்கை செலுத்தினார்.
அண்ணன் திரு. ஹெச். ராஜா அவர்களும், தன் வீரியமிக்க வழியில் ஒரு படி மேலே சென்று கட்சியை வளர்த்து எடுத்தவர். அடுத்ததாக, மாநில தலைவராக இருந்தபோது ”தாமரை மலர்ந்தே தீரும்” என்ற மகா மந்திரத்தை நாடெங்கும் பரப்பிய முன்னாள் ஆளுநரான திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கட்சியை மேலும் ஒரு படி உயர்த்தினார்.
இதே போலவே அண்ணன் உயர்திரு. சிபி ராதாகிருஷ்ணன் அவர்களும் தனது ”ரத யாத்திரை” மூலம் கட்சியை ஒரு படி உயர்த்தினார்.
அண்ணன் திரு. எல்.முருகன் அவர்கள் தலைவராக இருந்த பொழுது, ”வேல் யாத்திரை” நடத்தி அரசியல் வேள்வியை தொடங்கினார்.
சகோதரி திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் அகில இந்திய மகளிர் அணி தலைவியாக இருந்து, தீவிரமாக பணியாற்றி, அவரும் கட்சியை உயர்த்தி வருகிறார்.
இவர்களைப் போல திரு. அண்ணாமலை அவர்கள் ”என் மண், என் மக்கள்” என்ற யாத்திரை மூலம் நடைபயணம் சென்று, பாஜக என்ற கட்டி முடிக்கப்பட்ட கோபுரத்திற்கு சக்தி மிகுந்த தங்க கலசங்களை நிறுவினார்.
இப்பொழுது எனக்கு வழங்கியுள்ள பணி என்னவென்றால், நான் மாநிலத் தலைவராக இருக்கும் இந்த நேரத்தில், திரு. அண்ணாமலை அவர்கள் அமைத்த கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய பொறுப்பு என்னை சார்ந்ததாக இருக்கிறது.
வரும் 2026 ஆம் ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மூலம் நிச்சயம் அந்த கும்பாபிஷேகம் நடக்கும். இன்று தமிழகத்தை ஆளுவோர் விரட்டி அடிக்கப்பட்டு, காடாளும்
காலம் நிச்சயம் வரும். காலங்கள் இதை செய்ய மறந்தாலும், கிரகங்கள் நிச்சயம் செய்யும் !
நமது மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஜி அவர்கள் சொன்னதைப் போல தமிழகத்தில் ”தேசிய ஜனநாயக ஆட்சி” நடந்தே தீரும்… ”தாமரை மலர்ந்தே தீரும்”
எனக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகள் பதவி காலத்தில், பாரதிய ஜனதா கட்சியை மூன்று தலைமுறைகளுக்கான, 30 ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியை காணும் கட்சியாக உருவாக்குவேன் என்று உறுதி கூறுகிறேன்.
நமது தலைமையகமான கமலாலயத்தில் உள்ள பாரதத்தாயின் பாதம் தொட்டு வணங்கி, இந்த தாயகப் பணியை மேற்கொள்கிறேன். இதற்கிடையில நமது பாரத ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் நமது தேச பக்தர்களை நெஞ்சில் நிறுத்தி பார்க்கிறேன்.
இந்த கட்சியை வேர்வைத் துளிகளாலும், இரத்த துளிகளாலும் வளர்த்தெடுத்த உத்தமத் தலைவர்களின் தியாகங்களை நினைத்துப் பார்க்கின்றேன்.
தேசப் பிரிவினையை எதிர்த்து களம் கண்டு தன் உயிர் தியாகம் செய்த தேசபக்தர் ”ஷியாம பிரசாந்த் முகர்ஜி”.
”ஏகாத்ம மானவ தரிசனம்” என்னும் தேசிய மந்திரத்தை நமக்கு அளித்த ”தீனதயாள் உபாத்தியாயா”.
மனித சக்தியை ஒற்றுமைப்படுத்தி ”ஒரே உணர்வு, ஒரே நாடு” என்ற தத்துவத்தை வார்த்து எடுத்த, பரம பூஜனிய ”டாக்டர் கேசவ பலிராம் ஹெட் கேவர்”.
”அகண்ட பாரதம்” என்னும் லட்சிய பாதையை நோக்கி பயணித்த ”அடல் பிகாரி வாஜ்பாய்”.
இவர்களைப் போல தென் தமிழகத்தில் தோன்றிய வீர தியாகிகள் ”கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார்”, “வா.வே.சு. ஐயர்”, ”சுப்பிரமணிய சிவா”, “மகாகவி பாரதி” மற்றும் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்து நமது நெஞ்சங்களில் என்றும் வாழும் உத்தமத் தலைவர் ”பசும்பொன் முத்துராமலிங்க தேவர்”, கருப்பு காந்தி, கர்மயோகி கர்மவீரர் ”பெருந்தலைவர் காமராஜர்”, அரசியல் சாணக்கியர் ”மூதறிஞர் ராஜாஜி” போன்ற தேசபக்தர்களை நினைத்து அவர்களது பாதங்களைத் தொட்டு என் கண்களில் இட்டு கொள்கிறேன்.
அவர்கள் விட்டுச் சென்ற தேசிய, தெய்வீக பாதையில் பயணித்து வெற்றி பெற அன்னை பாரதத் தாயை வணங்குகிறேன்.
அன்பு தாமரை நெஞ்சங்களே, சொந்தங்களே !
நமது கட்சி எனக்கிட்ட பணிகளை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்து வரும் இந்த வேளையில், எனக்கு உங்களோடு நேருக்கு நேராக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆகவே நாம் இருவரும் பேசும் களமாக, நமக்கு இருப்பது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ”இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு” என்ற மாலை மின்னிதழ். இனி இதன் மூலமாக நான் உங்களோடு தினமும் பேச முடிவு செய்து இருக்கிறேன்… பேசுவோம்…!
‘மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், அது முடிந்த பின்னால் தான் பேச்சு இருக்கும்”. ஆம், பாஜக என்ற மூன்று எழுத்தில் என் முழு மூச்சிருக்கும் அதை வளர்த்தெடுப்பதில் தான் எனது முழு முயற்சியும் இருக்கும்
”இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி, பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்ன கொடி, அது பஞ்சமில்லை என்னும் அன்னக்கொடி” அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் தேசியக்கொடி. என்பதைக் கூறி, நாளை பேசும் வேளை வரும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்,
ஜெய் ஹிந்த் ! பாரத் மாதா கி ஜெய் !
அன்புடன் உங்கள் வீட்டுப்பிள்ளை நயினார் நாகேந்திரன்.