
சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையையும், வெளியூர்களுக்கு செல்ல முக்கியமான ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் 21 கிமீ வண்டலூர்-கேளம்பாக்கம் இணைப்பு சாலையில் மக்கள் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளனர். இவ்வழியில் முக்கிய சுற்றுலா தளங்களும், கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன.
ஒரு மணிநேரத்தில் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள், பல ஆயிரம் மக்கள் பயன்படுத்தும் சாலையில், பல கிராம பஞ்சாயத்துக்கள் இருந்தும் தெருவிளக்குகள் இல்லை என்ற அவலநிலை தற்போது உள்ளது. இதனால் இரவு நேரத்தில், அவ்வழி நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மெத்தசிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், எம்எல்ஏ முதல் பிடிஓ வரை அனைவரும் அங்குள்ள கிராம பஞ்சாயத்துகளில் நிலவி வரும் நிதி பற்றாக்குறையால், தெரு விளக்குகள் அமைத்தால் கிராம நிர்வாகத்திடம் மின் கட்டணம் செலுத்த பணம் இல்லை என்று காரணத்தை செல்கின்றனர்.
பல கிராமங்களின் நிதிசூழல் படு மோசத்தில் இருக்கும் சூழலில் திமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்களுக்கு விளம்பர பதாகைகள் வைக்க மட்டும் திமுக அரசின் ஊரக வளர்ச்சித்துறை ₹500 கோடி வீண் செலவழித்துள்ளது என தெரியவந்துள்ளது. மக்களின் வரிப் பணம் அவர்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக ஆட்சி செய்யும் திமுக அரசின் விளம்பரத்திற்காக செலவு செய்வது எந்த வகையில் நியாயம் என்று பலதரப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தின் முக்கியப் பகுதியிலே இந்த நிலைமை என்றால் மற்ற ஊர்களில் எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்து பாருங்கள் என்றும் பலர் கேட்கின்றனர்.






