திமுகவுக்கு தேசியம் என்றாலே கசக்குதா? ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திரதின வாழ்த்துச்செய்தியை புறக்கணிப்பதா!

திமுக அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கத் துடிக்கும் அரசு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது பால் முகவர்கள் சங்கம்

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் கடந்த ஆட்சியில் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், ‘‘சுதந்திர தினம்’’, ‘‘குடியரசு தினம்’’, ‘‘தேசிய பால் தினம்’’ உள்ளிட்ட தேசிய தினங்களுக்கும் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடுவது வழக்கம்.

கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகளுக்கும் கூட வாழ்த்துச் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், நமது நாட்டின் 77வது சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வெளியிடாமல், வழக்கமான நடைமுறையை தவிர்த்து, முக்கியமான தேசிய தினத்தை புறக்கணித்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் நடப்பாண்டின் ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் 74வது குடியரசு தினத்திற்கும், ஆண்டுதோறும் நவம்பர்- 26ம் தேதி தேசிய பால் தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்தாண்டு அந்நாளில் ‘‘தேசிய பால் தினம்’’ வாழ்த்துச் செய்தியும் வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகம் தற்போது 77வது சுதந்திர தினத்திற்கும் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்திருப்பதன் மூலம் தேசிய தினங்களை தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

தமிழக அரசு சார்பில் புதிதாக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கும், புதியதாக அமைக்கப்படும் மருத்துவமனைகள், நூலகங்கள் மற்றும் பல்வேறு விழா அரங்குகளுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டுவதற்கும், கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு செலவில் கொண்டாடுவதற்கும் முனைப்பு காட்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய குடியரசு தினம், சுதந்திர தினம், ‘‘தேசிய பால் தினம்’’ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி, தேசிய தினங்களுக்கு மட்டும் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணிப்பு வேலைகளை செய்யும் ஆவின் அதிகாரிகள் மீதும், அதனை கண்காணிக்கத் தவறிய பால்வளத்துறை அதிகாரிகள் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதததும், புறக்கணிப்பு பணிகள் தொடர்கதையாக இருப்பதும் வேதனைக்குரிய விசயமாகும்.

திமுக அரசுக்கு தேசியம் என்றாலே கசக்கிறதா? என தெரியவில்லை. ஏற்கனவே இந்தியாவின் 74வது குடியரசு தினத்திற்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்திற்கும், அதனை கண்காணிக்கத் தவறிய பால்வளத்துறைக்கும், நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், தேசிய பால் தினம், இந்திய குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தேசிய தினங்களை புறக்கணித்தது போல் தற்போது இந்திய சுதந்திர தினத்திற்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வருங்காலங்களில் இது போன்ற புறக்கணிப்புகள் நடைபெறாமல் தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஆண்டுதோறும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் தேச விரோத செயல்களுக்கு பல்வேறு பொது அமைப்புகளிடம் இருந்து வரும் கண்டனங்கள் தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது! புரிந்து கொள்ளுமா விடியா அரசு ? 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top